Sunday, September 14, 2008

எனது ஐந்து வருட அனுபவம்....

இந்த அலுவலகத்தில் பணிக்காக சேர்ந்து 5 வருடங்கள் ஒடி விட்டன. எல்லோரையும் போல் நானும் இந்த அலுவலகத்திற்கு விண்ணப்பித்தேன் இமெயில் மூலம். நம்மையெல்லாம் எங்கு தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்ற ஒரு எண்ணம். இலக்கு எதுவும் இல்லையென்றால் நம் பலம் அதிகரித்து விடும் போல. 2 வருட அனுபவம் என்பதாலோ என்னவோ என்னை நேர்முகத் தேர்விர்க்கு அழைத்திருந்தார்கள். பழக்கமில்லாத விஷயமாயிற்றே, இருந்தாலும் சிறிது பரீட்சைக்கு படிப்பது போல நுனிப்புல் மேய்ந்து விட்டு கிளம்பினேன் JAVAவை.

வார நாட்களிலே தாடி வைத்து,தோல் செருப்பு அணிந்து வரும் என்னை, சனிக்கிழமை பளிச்சென்று சவரம் செய்த முகம், இஸ்திரி செய்த சட்டை அணிந்து பார்த்தவுடன் என் நண்பன் சந்தேகப்பட்டான். ஒருவழியாக அவனை சமாளித்து, நேர்முக தேர்விற்கு போனேன். அங்கும் நான் தான் கடைசி ஆள். கையிலே ஒரு விண்ணப்பம் கொடுத்து அதில் என்னை பற்றிய விவரம் கேட்டிருந்தார்கள். எதிர்பார்க்கும் சம்பளம் என்று ஒரு கேள்வி. யோசித்துப் பார்த்துவிட்டு நான் தற்சமயம் வாங்கும் சம்பளத்தை இரு மடங்காக்கி போட்டேன். ஒரு வழியாக பூர்த்தி செய்து HR பெண்ணிடம் கொடுத்தால் அவள் பார்த்துவிட்டு என்னை ஏறிட்டாள். உள்ளே சிரித்துக்கொண்டாள்.

சுமார் 45 நிமிட கேள்வி, கொஞ்சம் பதில் உரையாடலுக்கு பிறகு, பெண் பார்த்துவிட்டு போய் கடிதம் போடுகிறோம் என்பது போல, தம்பி போய் வாருங்கள் சொல்லி அனுப்புகிறோம் என்றார்கள். வெளியில் வந்து ஒரு சிகரெட் பற்ற வைத்து முடித்தபின், என் இருகக்கர வாகனத்தை கிளப்பித் திருப்பும் போது ஒரு கார் திடீரென தென்பட அதில் மோதப் பார்த்தேன். உள்ளே பார்த்தால் என்னை நேர்முகத்தேர்வில் கேள்வி கேட்ட மனிதர். அவர் அப்படியே முறைத்தார். ஆஹா எல்லாம் முடிந்தது என்று நினைத்து ஒரு வழியாக கிளம்பினேன்.

மூன்று நாட்கள் ஒடிற்று. புதன் காலை அலுவலகம் சென்று யாஹூ இமெயிலை பார்த்தேன் ஒரு இமெயில், வாழ்த்துக்கள், தங்களை எங்கள் அலுவலகப் பணிக்காகத் தேர்வு செய்து இருக்கிறோம், இன்று மாலை அலுவலகம் வந்து பணி சேர்வதற்கான ஆணை வாங்கிக் கொள்ளவும். படித்தவுடன் என் வாழ்வில் ஒரு நிமிடம் நின்று போனது

மாலை, சந்தோஷத்துடன் என் புதிய வாழ்விற்க்கான விசாவை வாங்கச் சென்றேன். அங்கு சென்றால் என்னைப் போன்று ஒரு கூட்டம், சிலர் கையிலே காகிதம் வைத்துக் கொண்டு கூடி கூடி பேசிக் கொண்டு இருந்தனர். உனக்கு எவ்வளவு, எனக்கு இவ்வளவு தான். அந்த அலுவலகத்தில் அவனுக்கு இவ்வளவு கொடுத்தார்கள். இப்படியாக ஒரே பேச்சு. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் பெயர் அழைக்கப்பட்டது, சென்று அவர்கள் கொடுத்த காகிதம் வாங்கிப் பார்த்தேன், சம்பளம் எங்கே போட்டிருக்கிறது என்று கூட தெரியாமல், வழக்கம் போல் HR பெண்ணிடம் கேட்டேன், அவள் சொன்ன இடத்தில் பார்த்தவுடன் என் வாழ்வில் 2ஆவது நிமிடம் நின்றது. அன்று அந்த பெண் நான் எதிர்பார்க்கும் சம்பளத்தைப் பார்த்து ஏன் சிரித்தாள் என்று இப்போது புரிந்தது எனக்கு, நான் கேட்ட சம்பளத்தின் இருமடங்கு தான் அங்கே அடிப்படைச் சம்பளம் என்று.

வாங்கிக்கொண்டு வெளியே வந்தால், எனக்கு 30%, 50%, 100% சம்பள உயர்வு, எனக்கு இவ்வளவு தான் என்ற பேச்சுக்கள் புரியவில்லை. சந்தோஷத்துடன் பற்ற வைத்தேன் ஒரு சிகரெட். ஆனால் இன்று நானும் பேசுகிறேன் % உயர்வு பற்றி.
5 வருட அனுபவம் பெற்றேன், நிறைவு இழந்து நிற்கிறேன்.

பின் குறிப்பு: வறுமையிலே விரதம் வியப்பில்லை, வளமையிலே நிறைவுதான் வியப்பு.
(எழுத்துப் பிழைகளை திருத்த முயற்சித்திருக்கிறேன்.)